
தமது உயிருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால், இலங்கை கிரிக்கட் அணியில் ஆட்டநிர்ணயம் செய்தவர்களின் பெயர்களை வெளியிடமுடியும் என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு பின்னரே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ஆட்டநிர்ணயத்தில் சம்பந்தப்பட்டோர், தற்போதே ஹசானுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஹசானின் மனைவியான அப்சாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்க்கட்சி அரசியல்வாதியான ஹசான் திலகரட்ன 1992 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கட் அணியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்று வருவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். தாம் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்துக்கு ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வழங்கப் போவதாகவும் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.
83 டெஸ்ட் போட்டிகளிலும், 200 ஒருநாள் கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடிய ஹசான் உயிரச்சுறுத்தல் காரணமாக கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்து வந்தார்.
இதே வேளை ஹசான் திலகரட்ன முடிந்தால் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிடட்டும் என்று இலங்கையின் அணிக்கு கடந்த உலக கிண்ண போட்டிகளின் போது தலைமை தாங்கிய குமார் சங்கக்கார சவால் விடுத்துள்ளார்.