
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் போட்டிக் குழுத் தலைவரும் மற்றொரு முக்கிய உறுப்பினரும் தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.
போட்டிக்குழுத் தலைவர் ரவி டி சில்வா மற்றும் குழுவின் முக்கிய உறுப்பினரான அஷ்லிரட்நாயக்கவுமே தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்தவர்களாவர். உலகக் கிண்ணப் போட்டியை தொடர்ந்து இலங்கை அணிக் கப்டன் குமார் சங்ககார துணைக் கப்டன் மஹேல ஜெயவர்தன தேர்வுக் குழு என பலரும் தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்திருந்தனர்.
இந்த நிலையிலேயே தற்போது போட்டிக் குழுத் தலைவரும் முக்கிய உறுப்பினரும் இராஜிநாமா செய்துள்ளனர். போட்டிக் குழுவுக்குள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகிகளின் அதிகரித்த தலையீடு காரணமாகவே தாங்கள் பதவி விலகியதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போட்டிக் குழுவின் தற்காலிக தலைவராக ஹிகான் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கை கிரிக்கெட்டினுள் அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருவதால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருவதாக பலரும் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.