
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மகிளா ஜெயவர்தனா சதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை அடைந்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி கண்ட இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி லீட்சில் நேற்று நடந்தது. "டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், "பீல்டிங் தேர்வு செய்தார்.ஜெயவர்தனா அபாரம்:முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு கேப்டன் தில்ஷன் (9), சாண்டிமல் (5) ஏமாற்றினர். பின் இணைந்த மகிளா ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய ஜெயவர்தனா, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் 15வது சதம் அடித்தார்.சங்ககரா அரைசதம்:மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த சங்ககரா அரைசதம் கடந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்த போது, சுவான் சுழலில் சங்ககரா (69) சிக்கினார். தொடர்ந்து அசத்திய ஜெயவர்தனா, 150 பந்தில் 144 ரன்கள் (14 பவுண்டரி) எடுத்து சுவான் சுழலில் வெளியேறினார். மாத்யூஸ் (46*) கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சுவான் 2, பிரஸ்னன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.மார்கன் ஆறுதல்:கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு குக் (48), கீஸ்வெட்டர் (25), டிராட் (39) உள்ளிட்ட "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு கைகொடுத்தனர். பீட்டர்சன் (13) சோபிக்கவில்லை. பின் பொறுப்புடன் ஆடிய மார்கன் (52), பெல் (35) ஆறுதல் அளித்தனர். இங்கிலாந்து அணி 45.5 ஓவரில் 240 ரன்களுக்கு "ஆல்-அவுட் ஆனது. இலங்கை சார்பில் லக்மல், ரந்திவ் தலா 3, ஜீவன் மெண்டிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.