
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பைனலுக்கு ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் டோகோவிச் முன்னேறினர்.
லண்டனில், 125வது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் டோகோவிச், பிரான்சின் ஜோ-வில்பிரிட் டோங்காவை சந்தித்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டோகோவிச் 7-6, 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால் 5-7, 6-2, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.
சாதிப்பாரா ஷரபோவா:
இன்று நடக்கவுள்ள பெண்கள் ஒற்றையர் பைனலில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா மோதுகின்றனர்.
கடந்த 2004ல் முதன்முறையாக விம்பிள்டனில் பட்டம் வென்ற ஷரபோவா, இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம். கடந்த ஆண்டு அரையிறுதி வரை முன்னேறிய கிவிட்டோவா, முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முன்னேறியுள்ளார். இன்று இவர் அசத்தும் பட்சத்தில் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதிக்கலாம்.
சானியா ஜோடி தோல்வி:
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி, செக் குடியரசின் கெவிடா பெஸ்கி, சுலோவேனியாவின் கதரினா ஸ்ரீரிபோட்னிக் ஜோடியிடம் 3-6, 1-6 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது.
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி 6-1, 2-6, 2-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஹென்லி, சீன தைபேயின் சூ-வெய் ஹசிக் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
பயஸ் ஜோடி ஏமாற்றம்:
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 3-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் டேனியல் நெஸ்டர், சீன தைபேயின் யங்-ஜான் சான் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
பூபதி ஜோடி அபாரம்:
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இஸ்ரேலின் ஜோனாதன் எர்லிச், ஷகர் பியர் ஜோடியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.