
இலங்கைக்கு எதிரான மான்செஸ்டர் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 3-2 என ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
இங்கிலாந்து, இலங்கை அணிகள் இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடந்தது. டொஸ் வென்ற இங்கிலாந்து அணி கப்டன் குக் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் குக்(31), கீஸ்வெட்டர்(43) இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். பீட்டர்சன்(5) ஏமாற்றினார். பின் டிராட், மார்கன் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மார்கன் அரைசதம்(57) அடித்து வெளியேறினார். அடுத்து வந்த பெல்(4), படேல்(8), பிரஸ்னன்(6) யாரும் நிலைக்கவில்லை. அதிகபட்சமாக டிராட் 72 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. ரந்திவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
சற்று கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு அறிமுக வீரர் கருனாரத்னே(4), கப்டன் தில்ஷன்(4) கைகொடுக்கவில்லை. ஜெயவர்தனாவும்(9) ஏமாற்றினார். சற்று ஆறுதல் தந்த சண்டிமால் அரைசதம்(54) அடித்து அவுட்டானார். ஆறாவது விக்கெட்டுக்கு மாத்யூஸ், மெண்டிஸ் ஜோடி 102 ரன்கள் சேர்த்தனர்.
இருப்பினும் மெண்டிஸ்(48), குலசேகரா(4), மாத்யூஸ்(62) அடுத்தடுத்து அவுட்டாக இலங்கை அணி 48.2 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருது டிராட்டுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகனாக கப்டன் குக் தேர்வு செய்யப்பட்டார்.