
23:00
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் இத்தாலியின் பெபியானோ கருணா 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் சசி கிரண் 6 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்தார். இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முதலாவது சர்வதேச செஸ் போட்டி சப்தர்ஜங் விமான நிலைய அதிகாரிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் இத்தாலியின் பெபியானோ கருணா, பிலிப்பின்ஸ் நாட்டின் வெஸ்லியை தோற்கடித்து 7 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். இந்திய வீரர் சசி கிரண், சீனாவை சேர்ந்த உலக சாம்பியன் பட்டம் வென்ற ஹூவய்பானை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் சசி கிரண் 6 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் பரிமார்ஜன் நெகி 3.5 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தை பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி வீரர் பெபியானோ கருணாவுக்கு ரூ. 3.52 லட்சமும், இரண்டாவது இடம் பிடித்த இந்திய வீரர் சசிகிரணுக்கு ரூ. 2.68 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இது குறித்து மாஸ்டர் சசிகிரண் கூறுகையில், போட்டியின் தொடக்கத்தில் 2 சுற்றுக்களில் தோல்வி அடைந்தேன். அதன் பின்னர் 4 முறை வெற்றி பெற்றேன். 4 முறை டிரா செய்தேன். இது நல்ல முன்னேற்றம். இறுதி போட்டியில் வெற்றி பெற கடினமாக முயற்சி செய்தேன். ஆனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இருப்பினும் 7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.