

இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த 33வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
உமேஷ் அசத்தல்:
கோல்கட்டா அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. மார்னே மார்கல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த காலிஸ் அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 11 ரன்களுக்கு இர்பான் பதான் வேகத்தில் போல்டானார். அகார்கர் பந்தில் கோஸ்வாமி(22) காலியானார். கேப்டன் காம்பிர்(18) ஏமாற்றினார். <போட்டியின் 15வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் இரட்டை "அடி' கொடுத்தார். 5வது பந்தில் சகோதரர் இர்பான் பதானிடம் "கேட்ச்' கொடுத்து யூசுப் பதான்(5) வெளியேறினார். 6வது பந்தில் மார்கன்(0) நடையை கட்டினார். இப்படி "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
திவாரி அரைசதம்:
பின் மனோஜ் திவாரி பொறுப்பாக ஆடினார். அகார்கர், யாதவ், மார்கல் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்த இவர், அரைசதம் கடந்து அசத்தினார். கடைசி கட்டத்தில் மார்கல் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த டசாட்டே(19) அணிக்கு கைகொடுத்தார். பிரட் லீ(1) ரன் அவுட்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. திவாரி(61) அவுட்டாகாமல் இருந்தார்.
விக்கெட் மடமட:
சுலப இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு துவக்கத்திலேயே சோதனை. பாலாஜி வேகத்தில் வார்னர்(2) போல்டானார். பாலாஜி ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக், அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இவர் 34 ரன்களுக்கு உனத்கத் வேகத்தில் வெளியேற, உள்ளூர் ரசிகர்கள் அதிர்ந்து போயினர். இர்பான் பதான்(9), பிர்ட்(8) ஏமாற்றினர். போட்டியின் 15வது ஓவரை வீசிய அப்துல்லா, ஹோப்ஸ்(25) மற்றும் நமன் ஓஜாவை(1) அவுட்டாக்கி, இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து டில்லி அணி 14.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் வேணுகோபால், யோகேஷ் அதிரடியாக ஆட, "டென்ஷன்' ஏற்பட்டது. ஆனால், பிரட் லீ வீசிய போட்டியின் 19வது ஓவரில் வேணுகோபால்(19), அகார்கர்(0) அடுத்தடுத்து ரன் அவுட்டாக, தோல்வி உறுதியானது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன. பாலாஜி துல்லியமாக பந்துவீசினார். இவரது வேகத்தில் யோகேஷ்(19) அவுட்டாக, டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை மனோஜ் திவாரி தட்டிச் சென்றார்.