

இலங்கை கிரிக்கெட்டுக்கு இது போதாத காலம். உலக கோப்பை பைனலில் தோல்வி, ஐ.பி.எல்., தொடரில் சர்ச்சை, மலிங்காவின் "திடீர்' ஓய்வு அறிவிப்பு என, சிக்கல்கள் தொடர்கின்றன. தற்போது, இலங்கை கிரிக்கெட்டை சூதாட்டம் மேகம் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து இலங்கை அணிக்காக 83 டெஸ்ட், 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, ஓய்வு பெற்ற ஹசன் திலகரத்னே (43) கூறியது:
இலங்கையில் கிரிக்கெட்டில் சூதாட்டம் இன்று நேற்று அல்ல, கடந்த 1992 ல் இருந்தே நடக்கிறது. சமீபத்தில் முடிந்த உலக கோப்பை பைனலில், இலங்கை வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்று சொல்லவில்லை. ஆனால், எதாவது ஒருவகையில் சூதாட்டம், நடந்து கொண்டுதான் உள்ளது. இது புற்றுநோய் போல பரவியுள்ளது.
சூதாட்டம் குறித்த தகவல்களை பல்வேறு காலங்களில், பலர் வெளியிட முன் வந்தாலும், அவர்களுக்கு பணத்தை கொடுத்து பேசவிடாமல் செய்துவிட்டனர். அதேநேரம், சூதாட்டத்தில் ஈடுபட்டது யார், யார் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் பெயர்களை விரைவில் வெளியிடுவேன்.
உள் நோக்கம்:
தவிர, உலக கோப்பை அணி அறிவிப்புக்கு, மேலும் 10 நாட்கள் அவகாசம் இருந்த நிலையில், முன்னதாக அணியை அறிவித்ததில், ஏதோ உள்நோக்கம் உள்ளது. ஏனெனில் ஐ.பி.எல்., ஏலம் கடந்த ஜன. 8, 9ம் தேதியில் நடந்தது. அதற்கு ஒருநாள் முன்னதாக, உலககோப்பை இலங்கை அணியை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன்?
பதில் வேண்டும்:
அடுத்து, இந்தியாவுக்கு எதிரான பைனலின் போது, திடீரென நான்குபேரை ஏன் மாற்றினர் என்று எல்லோரும் கேள்விகள் கேட்கின்றனர். மெண்டிசை மாற்றியது, ரன்னே எடுக்காத கபுகேதராவை, சமரசில்வாவுக்கு பதில் அணியில் சேர்த்தது போன்ற கேள்விகளுக்கு அர்ஜுனா ரணதுங்கா தான் பதில் சொல்லவேண்டும்.
இரண்டாவது பாக்.,:
தயவு செய்து, பொறுப்பில் உள்ளவர்கள் இதில் தலையிட்டு, அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் சூதாட்டத்தை ஒழிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், சூதாட்டத்தில் இரண்டாவது பாகிஸ்தானாக, இலங்கை மாறிவிடும்.