
ஐ.பி.எல். லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை சந்திக்கிறது.
இரண்டு அணிகளும் "ஹாட்ரிக்" வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல். "டுவென்டி 20" கிரிக்கட் தொடர் நடக்கிறது. இதில் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தற்போதைய ஐ.பி.எல். தொடரில் சென்னை கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 5 ல் வென்றுள்ளது. சென்னை அணியின் துடுப்பாட்டத்தில் "டாப் ஆர்டர்" வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். துவக்க வீரர் மைக்கேல் ஹசி 248, முரளி விஜய் 214 ரன்கள் எடுத்துள்ளனர். அடுத்து "மிடில் ஆர்டரில்" பத்ரிநாத் 240 ரன்னும், சுரேஷ் ரெய்னா 212 ரன்களும் எடுத்துள்ளது ஆறுதல் தான். டோனியும் (158) அவ்வப்போது அதிரடியில் ஈடுபடுகிறார். முதல் போட்டியில் 64 ரன்கள் எடுத்த இளம் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கு ( 8 போட்டியில் 83 ரன்) அதிக வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் தான்.
"ஆல் ரவுண்டர்" ஆல்பி மார்கல் கடைசி நேர அதிரடிக்கு மீண்டும் திரும்பியிருப்பது உற்சாகமான செய்தியாக உள்ளது. வேகப்பந்துவீச்சில் பொறுத்தவரையில் துவக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் கடைசி நேரத்தில் போலிஞ்சர் (10 விக்.), ஆல்பி மார்கல் (10 விக்.) சிறப்பாக செயல்படுகின்றனர். இது அணி நிர்வாகத்துக்கு கூடுதல் நம்பிக்கை தருகிறது. சுழலில் அஷ்வின் (7 விக்.), ஜகாதி (4 விக்.), ரந்திவ் (5 விக்.) கூட்டணி தான் இன்றும் தொடரும் எனத் தெரிகிறது. இதனால் குலசேகரா, டிம் சவுத்திக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான்.
ராஜஸ்தான் அணி இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 5 ல் வென்றுள்ளது. தவிர, கடைசியாக சொந்த மண்ணில் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும், வென்ற உற்சாகத்தில் இந்த அணி களம் காணுகிறது. அணியின் துடுப்பாட்டத்தில் ஜோகன் போத்தா (189 ரன்கள்), மூத்த வீரர் டிராவிட் (176), வாட்சன் (144) மற்றும் அதிரடி ராஸ் டெய்லர் (142) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை தருகின்றனர். இவர்களது சீரான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணியின் வெற்றி எளிதாகிறது.
ராஜஸ்தான் அணியின் பவுலிங் மிகவும் வலுவாக உள்ளதாக தெரிகிறது. கடந்த மூன்று போட்டிகளில் இந்த அணிக்கு எதிராக கொச்சி 109, மும்பை 94, புணே 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இன்றும் சென்னை அணியை குறைந்த ஸ்கோருக்குள் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். இதற்கு அமித் சிங், சித்தார்த் திரிவேதி, டெய்ட் ஆகியோர் முயற்சிக்கலாம். தவிர வார்ன் சுழலும் சற்று சிக்கலைத் தரலாம்.
சென்னை, ராஜஸ்தான் அணிகள் கடந்த 3 போட்டிகளிலும் "ஹாட்ரிக்" வெற்றி பெற்று வந்துள்ளது. தவிர புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பெற இவர்களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று வெற்றி பெறும் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் இரு அணிகளும் கடும் போராட்டத்துக்கு தயாராகி உள்ளன.
நான்காவது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை சென்னையில் 4 போட்டிகளில் பங்கேற்றது. இந்த நான்கு போட்டிகளிலும் (கொல்கத்தா, பெங்களூரு, புணே, டெக்கன்) சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வரிசையில் இன்று ராஜஸ்தானையும், சென்னை அணி வீழ்த்தும் என்று நம்பலாம்.
கடந்த மூன்று ஐ.பி.எல். தொடர்களில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 4 முறை வென்றுள்ளது. ராஜஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது.