
01:21
ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டு தொடர்பாக தான் குறிப்பிட்டிருந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வெளியிடுவதை சட்டரீதியான காரணத்துக்காகத் தான் தவிர்த்துக் கொண்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசான் திலகரத்ன தெரிவித்துள்ளார்.நான் எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துள்ளேன். சட்ட விவகாரங்களின் அடிப்படையில் நான் கூறியிருந்த வீரர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமென எனக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது என்று திலகரத்ன தெரிவித்துள்ளார். ஹசான் திலகரத்ன 2003-2004 வரை இலங்கை கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கியவராவார். அண்மையில் இடம்பெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போதும் ஆட்ட நிர்ணயம் பங்களிப்பைச் செலுத்தியிருந்ததாகத் தான் சந்தேகிப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த இறுதிப் போட்டியில் 07 விக்கெட்டுகளால் இந்தியாவிடம் இலங்கை தோல்விகண்டிருந்தது. ஆட்ட நிர்ணயம் இந்த நாட்டில் சில காலமாக இருந்து வருகிறது. இது புற்றுநோய் போல் பரவியுள்ளது. அதற்குப் பொறுப்பானவர்களாகவிருந்த ஆட்கள் இதனை செவிமடுக்க வேண்டும். அதிகளவு பொறுப்புடன் இதனை நான் இன்று குறிப்பிடுகிறேன். இதற்குப் பொறுப்பானவர்களின் பெயர்களை நான் விரைவில் வெளியிடுவேன் என்று உள்ளூர் தொலைக்காட்சி கலந்துரையாடலின்போது அவர் கூறியிருந்தார்.
முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார, திலகரத்னவுக்கு சவால் விடுத்திருந்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கக்கார தெரிவித்திருந்தார். இதேவேளை, திலகரத்னவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி எனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை கூறியுள்ளேன் என்று திங்கட்கிழமை அமைச்சர் கூறியிருந்தார். 1992 இலிருந்து ஆட்ட நிர்ணயத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக திலகரத்ன கடந்தவாரம் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். தேவையேற்படின் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நான் பயப்படவில்லை. அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டேன். பொருத்தமான நேரத்தில் பெயர்களை வெளியிடுவேன் என்று அவர் கூறினார். பத்தரமுல்லையில் மேல் மாகாணசபை அமர்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.