

சென்னை – பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று பெங்களூரில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி போராடி தோற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்திற்கும் சென்று விட்டது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ரன்களை மாத்திரமே எடுத்தது.
தோனி, சாஹா தவிர ஏனையோர் 10 க்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தனர்.
தோனி, சாஹா தவிர ஏனையோர் 10 க்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தனர்.
தோனி அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார். இதில் 6 சிக்ஸர்களும், 3 பவுன்றிகள் அடங்கும். பந்துவீச்சில் சஹீர் கான், அர்விந்த், வெட்டோரி தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி வழமை போல கிரிஸ் கேய்லின் அதிரடியில் இலகுவாக வெற்றி பெற்றது. கிரிஸ் கேய்ல் 50 பந்துகளில் 75 ரன்களும், கோலி 29 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் அஷ்வின், மோர்க்கல் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது.
எனினும் இன்று நடைபெற்ற கொல்கத்தா-மும்பை அணிகளுக்கான மற்றுமொரூ போட்டியில் கொல்கத்தா அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் சென்னைக்கு இரண்டாவது இடம் உறுதியாகிவிட்டது.
இதேவேளை இன்றுடன் முடிவடைந்த அனைத்து முதல் சுற்றுப்போட்டிகளின் படி காலிறுதி போட்டிக்கு சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. எனினும் இவற்றில் முதலிரு இடத்தை பிடிக்கும் அணிகள் ஒரு போட்டியிலும், மூன்றாம், நான்காம் இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றுமொரு போட்டியிலும் மோதும் என்ற விதிமுறையின் அடிப்படையில் எதிர்வரும் 24ம் திகதி மும்பையில் இடம்பெறும் முதலாவது காலிறுதி போட்டியில் சென்னை : பெங்களூர் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கும், தோல்வி அடையும் அணிக்கு இன்னுமொரு போட்டியும் காத்திருக்கிறது.