

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் "பிளே ஆப்' சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் "எலிமினேசன்' போட்டியில் மும்பை, கோல்கட்டா அணியை எதிர்கொள்கிறது.
பேட்டிங் எழுச்சி:
லீக் சுற்று போட்டிகளின் போது துவக்கத்தில் இருந்தே முதலிடத்தில் இருந்து வந்தது மும்பை அணி. பின் கடைசி நேரத்தில் தொடர்ந்து பல தோல்விகள் கிடைக்க, அடுத்த சுற்றுக்கு முன்னேற தடுமாறியது. இருப்பினும் கடைசி லீக் போட்டியில் கோல்கட்டா அணியை வீழ்த்தியது, மனதளவில் உற்சாகத்தை தந்துள்ளது.
இதனால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ள மும்பை அணி இன்றும் பேட்டிங்கில் எழுச்சி பெறும் என்று நம்பப்படுகிறது. அதேநேரம் அணியின் துவக்கம் தான் இன்னும் சரியாகவில்லை. ஜேக்கப்சிற்கு மாற்றாக வந்த சுமன் சொதப்பாமல் விளையாட வேண்டும்.
சீனியர் சச்சின் (477 ரன்கள்), ரோகித் சர்மா (359) மீண்டும் நம்பிக்கை தரலாம். கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி தேடித்தந்த அம்பதி ராயுடு (383), கோல்கட்டா அணிக்கு சிக்கல் தருவார் எனத் தெரிகிறது. அதிரடி வீரர்கள் போலார்டு (140), சைமண்ட்ஸ் (135) இத்தொடரில் ஏமாற்றினாலும், பிராங்க்ளின் பேட்டிங் அணிக்கு நம்பிக்கை தருகிறது.
மலிங்கா சொதப்பல்:
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் (27) வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, முனாப் படேல் (17) ஆகியோர் கடந்த சில போட்டிகளாக ஏமாற்றுவது வருத்தம் தான். சுழலில் ஹர்பஜன் சிங்கிடம் இன்னும் அதிகமாக எதிர் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தற்போதைய நிலையில் கோல்கட்டா அணியுடன் ஒப்பிடும் போது, மும்பை அணியின் பவுலிங் சுமார் ரகம் தான்.
காலிஸ் பலம்:
கோல்கட்டா அணிக்கு பேட்டிங்கில் முதுகெலும்பாக இருப்பது காலிஸ் (417), மனோஜ் திவாரி (355), கேப்டன் காம்பிர் (374) ஆகியோர் தான். பின் வரிசையில் அதிரடி யூசுப் பதான் (257) ஓரளவு கைகொடுக்கின்றார். தவிர, நெதர்லாந்தில் டசாட்டே, ரஜத் பட்டியாவும் ரன்சேர்க்க உதவலாம்.
பதிலடிக்கு வாய்ப்பு :
பவுலிங்கை பொறுத்தவரையில் கோல்கட்டா அணி பெரிதும் நம்பியிருப்பது சுழற் பந்து வீச்சு தான். இதுவரை 16 விக்கெட் வீழ்த்தியுள்ள இக்பால் அப்துல்லா, யூசுப் பதான் (13) ஆகியோர் சிக்கனமாக செயல்படுகின்றனர். இடையில் ரஜத் பட்டியாவும் (8) ஆறுதல் தருகிறார். ஆனால் 11 போட்டியில் 4 விக்கெட் மட்டும் கைப்பற்றிய பிரட் லீ, உனத்கட் (6) ஏமாற்றம் தருகின்றனர். மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில் பாலாஜி சொதப்பலாக பந்துவீசியதால், கோல்கட்டாவின் வெற்றி பறிபோனது. இன்று இவர் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் மும்பை அணிக்கு சரியான பதிலடி கொடுக்கலாம்.
வெளியேறுவது யார்?
இன்றைய போட்டியில் வெல்லும் அணி, நேற்று முன்தினம் தோல்வியடைந்த அணியுடன் மோதி (வரும் மே 27) வென்றால் தான், பைனலுக்கு செல்ல முடியும். ஆனால் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேற நேரிடும் என்பதால், இரு அணிகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.
---
மூன்றாவது அணி யார்?
ஐ.பி.எல்., புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்கள் பிடித்த அணிகள், வரும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி, மூன்றாவது அணியாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க முடியும். இது யார் என்பது இன்று முடிவாகி விடும்.
--
கோல்கட்டா ஆதிக்கம்
கோல்கட்டா, மும்பை அணிகள் இதுவரை 7 ஐ.பி.எல்., போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கோல்கட்டா அணி 6 முறை வென்றது. மும்பை அணி ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.