

அணியின் தலைமைப் பதவியில் இருந்து அப்ரிடியை நீக்கியுள்ள கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட்டின் முடிவு வீரர்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேப்டனை மாற்றியிருக்கும் இந்த முடிவால் வீரர்கள் தனித்தனி குழுக்களாக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை அரையிறுதி வரை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர் அப்ரிடி. அவரை நீக்கியிருப்பதால் எந்த பலனும் கிடைக்காது. பட் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி அப்ரிடியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இவ்வாறு அடிக்கடி கேப்டனை மாற்றுவது அணி வீரர்களுக்கு இடையே ஒற்றுமையின்மையையே ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் தாஹிர் ஜியா தெரிவித்தார்.
முன்னாள் தேர்வுக்குழு தலைவர் இக்பால் காஸிம் கூறுகையில், அடிக்கடி கேப்டனை மாற்றுவதால் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போகும். கடந்த 2008 அக்டோபர் முதல் இப்போது வரையிலான காலத்தில் 11 முறை கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் காதிர் கூறுகையில், ஊடகங்களிடம் பேசும்போது அப்ரிடி கவனமாக இருக்க வேண்டும். ஆனாலும் கேப்டன் பதவியை பறித்திருப்பது சரியான முடிவு அல்ல. மிஸ்பா தலைமையின் கீழ் அப்ரிடியை விளையாட வைத்திருப்பது மோசமான முடிவு என்றார்.
முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஜலாலுதீன் கூறுகையில், அப்ரிடி எந்த கிரிமினல் குற்றத்தையும் செய்துவிடவில்லை. ஒரு கேப்டனாக அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றி பேசியதற்காக அவரை நீக்கியது நியாயமற்றது என்றார்.
வாசிம் அக்ரம்: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியது: பயிற்சியாளர் வக்கார் யூனுஸீடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அப்ரிடி நீக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புதிதல்ல. உலகக் கோப்பைக்கு பிறகு பாகிஸ்தானின் கதாநாயகனாக அப்ரிடி உயர்ந்துள்ளார். இந்த நிலையில் அப்ரிடியை மாற்றியிருப்பது தவறான முடிவு என்று அவர் கூறியுள்ளார்.