23:11
இம்மாதம் 30 ஆம் திகதி தனது 42 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள சனத் ஜயசூரிய, இறுதியாக 2009 ஆம் ஆண்டு இந்திய அணியுடனான போட்டிகளில் பங்குபற்றினார்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அவர், இங்கிலாந்துடான ஒருநாள் சுற்றுப்பேட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
444 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜயசூரிய, உலகக்கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்படாதமை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'இங்கிலாந்துடனான போட்டிகளில் விளையாட வாய்ப்பளித்தால் நாட்டிற்காக என்னால் முடிந்தளவு சிறப்பாக விளையாடுவேன்' என அவர் கூறியுள்ளார். தான் 18 வயதில் இருந்ததைப் போல் சிறந்த உடல்திட நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்தும் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இறுதியாக இலங்கை அணி இங்கிலாந்தில் ஒருநாள் தொடரில் பங்குபற்றியபோது இலங்கை அணி 5-0 விகிதத்தில் இங்கிலாந்தை வென்றது. சனத் ஜயசூரிய அத்தொடரில் 2 சதங்கள் உட்பட 322 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
42 வயதாகும் சனத் ஜயசூரிய, தற்போது சர்வதேச போட்டிகளில் நீடித்திருக்கும் அதிக வயதான வீரராக உள்ளார். ஆனால், இலங்கையின் சார்பில் அதிக வயதில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் சனத் ஜயசூரிய அல்லர்.
சோமசந்திர டி சில்வா 1885 ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்குபற்றிய போது அவருக்கு வயது 42 வருடங்கள், 261 நாட்களாகும். இவர் தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுத் தலைவராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இலங்கையரான பிளேவியன் அபோன்சோ, 1996 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணி சார்பில் தனது 43 ஆவது வயதில் (43 வருடங்கள், 129 நாட்கள்) விளையாடினார்.
