
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின், தோனி விரைவில் "சுகோய்' போர் விமானத்தில் பறக்க உள்ளனர். இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான "சுகோய்' ரக போர் விமானம் மிகவும் சக்தி வாய்ந்தது. மின்னல் வேகத்தில் பறந்து எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை பெற்றது. மோசமான வானிலையிலும் கூட சிரமம் இல்லாமல் பறக்கும் வசதி கொண்டது. இதில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் பறந்துள்ளனர். இவர்கள் வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மற்றும் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் சேர உள்ளனர்.
ராணுவத்தில் மிகுந்த ஆர்வமுடைய சச்சின் ஏற்கனவே இந்திய விமானப் படையின் கவுரவ "குரூப்' கேப்டனாக உள்ளார். இவரும் தோனியும் "சுகோய்' ரக விமானத்தில் பறக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான பரிந்துரை விமானப்படை சார்பில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று தரப்படும் என விமானப்படை தளபதி பி.வி.நாயக் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார்.
தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆனால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோனி விளையாடி வருகிறார். சச்சின் தனிப்பட்ட முறையில் இங்கிலாந்து சென்றுள்ளார். இதனால் இவர்களது "சுகோய்' அனுபவம் தள்ளிப் போகிறது.
இது குறித்து விமானப்படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""இரு கிரிக்கெட் வீரர்களையும் "சுகோய்' போர் விமானத்தில் அனுப்பும் எங்களது பரிந்துரைக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் புனே ஓடுதளத்தில் இருந்து இவர்கள் பறப்பார்கள். இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை,''என்றார்.