22:16
கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்த சச்சின் டெண்டுல்கர், டென்னிஸ் விளையாட்டு வீரர்களில் அதிகம் விரும்புவது ரோஜர் பெடரரைத்தான். டெண்டுல்கர் பெடரரின் உண்மையான விசிறி. தற்போது விம்பிள்டன் போட்டிகளில் மும்முரமாக விளையாடிவரும் ரோஜர் பெடரரை, சச்சின் டென்டுல்கர் விம்பிள்டனிலேயே சந்தித்து 1 மணி நேரம் அவருடன் கலந்துரையாடினார். ரோஜர் பெடரர் விம்பிள்டனின் 3 வது சுற்றுப்போட்டியில் அர்ஜெண்டினாவின் டேவிட் நல்பாண்டியனை எதிர்த்து விளையாடி வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்ற பின்னர்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. விம்பிள்டன் ராயல் பாக்ஸ் பால்கனியில் இவர்களின் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பின்னர் இருவரும் சிற்றுண்டியும் அருந்தினர்.
இந்த சந்திப்பு குறித்து இணையதளத்தில் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், எவ்வளவு தன்னடக்கமான மனிதர் பெடரர் என்று வியந்து பாராட்டியுள்ளார். மேலும் பெரரர் குறித்து அவர் தெரிவிக்கையில், பெடரர் கிரிக்கெட் விளையாட்டைக் குறித்து நிறைய விஷயங்களைத் தெரிந்துவைத்துள்ளார் என்றும் ஆச்சரியப்பட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பெடரரும் தனது இணைய தள செய்தியில், இன்றைய நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்திருக்கிறார். ஒரு நல்ல போட்டியில் வெற்றிபெற்றது, அத்தோடு இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரோடு உரையாடி மகிழ்ந்தது ஆகிய இரண்டு விஷயங்கள் இன்று நிகழ்ந்தன என்று தெரிவித்திருக்கிறார்.
