

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்டில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் `டிரா'வில் முடிந்தது. இதன் மூலம் இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக அபிமன்யு மிதுனுக்கு பதிலாக முனாப்பட்டேல் இடம்பெற்றார். இதே போல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் லென்டில் சிம்மன்ஸ், சர்வான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கீரன் பவெல், கிர்க் எட்வர்ட்ஸ் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இவருக்கும் இதுவே முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். டாஸ் ஜெயித்த இந்தியா முதலில் வெஸ்ட் இண்டீசை பேட் செய்ய பணித்தது.
இதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்தனர். எதிர்பார்த்தது போலவே ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருந்தது. இதனால் வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட முற்பட்ட போதிலும், நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. புதுமுக வீரர் கீரன் பவெல் (3 ரன், 23 பந்து), பிரவீன்குமாரின் பந்து வீச்சில், 2-வது ஸ்லிப்பில் நின்ற லட்சுமணிடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பரத் (12 ரன், 38 பந்து), இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
இன்னொரு அறிமுக வீரர் கிர்க் எட்வர்ட்சும் (6 ரன், 29 பந்து), தாக்குப்பிடிக்கவில்லை. அவர் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, சரிவில் இருந்து மீட்க டேரன் பிராவோவும், சந்தர்பாலும் போராடினார்கள். தொடக்கத்தில் இருந்தே ரன்கள் எடுக்க திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பவுண்டரியை 15-வது ஓவரில் தான் அடித்தது.
டேரன் பிராவோ இந்த முதலாவது பவுண்டரியை விரட்டினார். உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 28 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டேரன் பிராவோ 17 ரன்களுடனும் (40 பந்து, 2 பவுண்டரி), சந்தர்பால் 11 ரன்களுடனும் (38 பந்து) களத்தில் இருந்தனர்.