
அணியை எப்படி சிறப்பாக வழிநடத்துவது என்பதை, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னிடம் இருந்து கற்றுக் கொண்டேன்,'' என, பாகிஸ்தான் வீரர் சோகைல் தன்வீர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில், உள்ளூர் அணிகள் பங்கேற்ற முதலாவது "சூப்பர்-8 டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லாகூர் லயன்ஸ், முல்டான் டைகர்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் விளையாடின. இதன் பைனலில் சோகைல் தன்வீர் தலைமையிலான ராவல்பிண்டி ராம்ஸ் அணி, முகமது சமி வழிநடத்தும் கராச்சி டால்பின்ஸ் அணியை "சூப்பர் ஓவர்' முறையில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதுகுறித்து ராவல்பிண்டி ராம்ஸ் அணியின் கேப்டன் சோகைல் தன்வீர் கூறியதாவது: உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் எங்கள் ராவல்பிண்டி ராம்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், விரைவில் தேசிய அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அணியை எப்படி சிறப்பாக வழிநடத்துவது என்பதை, ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னிடம் இருந்து கற்றுக் கொண்டேன். கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நான், ஷேன் வார்ன் தலைமையின் கீழ் விளையாடினேன். அப்போது அவரிடம் இருந்து கிரிக்கெட் மற்றும் கேப்டன் பதவி குறித்த நிறைய விஷயங்களை அறிந்து கொண்டேன். அணி வீரர்களை எப்படி வழிநடத்துவது. இக்கட்டான நேரத்தில், எப்படி சரியான முடிவை எடுப்பது உள்ளிட்ட நிறைய விஷயங்களை வார்னிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு சோகைல் தன்வீர் கூறினார்.