
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா கைப்பற்றினார். இது, இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
லண்டனில் 125வது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் பைனலில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா மோதினர். முதல் செட்டில் ஷரபோவா செய்த தவறுகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட கிவிட்டோவா, 6-2 என எளிதாக கைப்பற்றினார்.
தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிவிட்டோவா, 6-4 என வென்றார். மொத்தம் ஒரு மணி நேரம், 25 நிமிடங்கள் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், செக் குடியரசின் கிவிட்டோவா (21) வெற்றி பெற்று, முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தினார்.
நடால் சாதிப்பாரா?
இன்று நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பைனலில், உலகின் தற்போதைய <"நம்பர்-1 வீரர், ஸ்பெயினின் நடால், செர்பியாவின் டோகோவிச்சை எதிர்கொள்கிறார். இதுவரை ஏழுமுறை விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள நடால், இப்போது ஐந்தாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளார். 2008, 2010ல் சாம்பியன் பட்டம் வென்ற இவர், இம்முறை "நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோகோவிச் நம்பிக்கை:
செர்பியாவின் டோகோவிச்சை பொறுத்தவரையில், விம்பிள்டன் தொடரின் பைனலுக்கு இப்போது தான் முதன் முறையாக முன்னேறியுள்ளார். ஆனால் ஏழு மாதங்களாக இவர் பங்கேற்ற 47 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளார்.
இவரது வியத்தகு வளர்ச்சி காரணமாக, நாளை அறிவிக்கப்படும் சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தர வரிசைப் பட்டியலில், முதன் முறையாக "நம்பர்-1 இடத்தை பெறவுள்ளார். தவிர, "நம்பர்-1 இடத்துடன் சேர்ந்து, இன்றைய பைனலில் எப்படியும் வென்று, வெற்றிக் கோப்பையையும் கைப்பற்ற முயற்சிப்பார்.
இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான மோதலாக இருக்கும்.
--
பைனலில் மகேஷ், வெஸ்னினா ஜோடி:
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின், அரையிறுதியில், இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஹான்லே, சீன தைபேயின் சூ-வை ஜோடியை 6-2, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.