

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியின் துவக்க வீரராக இடம் பெற்றிருப்பவர் அபினவ் முகுந்த். முதல் டெஸ்டில் சோபிக்காத இவர், இரண்டாவது டெஸ்டின், இரண்டாவது இன்னிங்சில் 48 ரன்கள் எடுத்தார். பேட்டிங் அனுபவம் குறித்து அபினவ் முகுந்த் கூறியது:
முதல் டெஸ்டில் பங்கேற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் வெஸ்ட்இண்டீஸ் வந்தோம். இந்த குறுகிய இடைவெளி, இங்குள்ள சூழ்நிலைக்கு மாறுவதற்கு போதுமானதாக இல்லை. தவிர, முதல் டெஸ்ட் குறித்து அதிக பதட்டம் இருந்தது. போட்டி துவங்கவதற்கு முதல் நாளில் எனக்கு தூக்கமே வரவில்லை.
இதனால் ஏற்பட்ட அதிக பதட்டம் காரணமாக, முதல் டெஸ்டில் சிறப்பாக செயலாற்ற முடியவில்லை. மற்றபடி இந்திய வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷடம். இவர்களுடன் இக்கட்டான சூழ்நிலையில் விளையாடியது, நல்ல அனுபவமாக இருந்தது.
இரண்டாவது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாமுவேல்ஸ் மற்றும் சந்தர்பால் ஆட்டத்தை உற்று கவனித்தேன். மோசமான பந்துகளை சாமுவேல்ஸ் அடிக்காமல் விட்டு விட்டார். சரியான பந்துகளை சிறப்பாக கையாண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இரண்டாவது இன்னிங்சில், இவர்களை போன்று நானும் செயல்பட வேண்டும் என நினைத்தேன். இதன்படி சரியாக செயல்பட்டதே, ரன் குவிப்பிற்கு காரணம்.
டிராவிட் அறிவுரை:
இரண்டாவது இன்னிங்சில், அனுபவ வீரர் டிராவிட் கொடுத்த ஊக்கமும் சிறப்பாக செயலாற்ற செய்தது. பேட்டிங் செய்யும் போது எதிரில் நின்று கொண்டு, பந்துகளை கவனமாகவும், நிதானமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என, கூறிக்கொண்டே இருந்தார். இதன் மூலம் அதிக தன்னம்பிக்கை ஏற்பட்டது.
திடீர் அதிர்ச்சி:
எட்வர்ட்ஸ் வீசிய பந்து என் ஹெல்மெட்டில் பலமாக பட்டபோது, சற்று அதிர்ச்சி அடைந்தேன். பின் போட்டியின் போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது இயல்பானது தான் என்று, என்னை நானே தேற்றி கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினேன்.
இவ்வாறு அபினவ் முகுந்த் கூறினார்.