
"பிரச்னையை தீர்க்கிறோம் என்று போர்டு நடத்திய கூட்டம் கேலிக்கூத்தானது. எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என, புலம்புகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் (டபிள்யு.ஐ.சி.பி.,) ஏற்பட்ட மோதல் காரணமாக, தேசிய அணியில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல். நீண்ட நாட்களாக இப்பிரச்னை குறித்து எதுவும் பேசாமல் இருந்த கெய்ல், இப்போது மனம் திறந்துள்ளார்.
தற்போதைய நிலை குறித்து அவர் கூறியது:
சிறுவனாக இருந்த போது ஜமைக்கா மற்றும் தேசிய அணிக்காக விளையாடவேண்டும் என்று கனவு கண்டேன். கடவுளின் சக்தியால் இந்த இரண்டு அணிகளுக்கும் கேப்டனாகவே இருந்து விட்டேன். ஆனால், தற்போது நான் தேசிய அணிக்காக விளையாட விருப்பம் இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது மிகவும் வருத்தமாக உள்ளது. ஏனெனில், தேசிய அணிக்காக காயத்துடன், வலியுடன் விளையாடியுள்ளேன். இதை பெருமையாகவே கருதுகிறேன்.
பழைய சதி:
இப்போது, உடற்தகுதியில்லை என்ற காரணத்துக்காக, அணியில் சேர்க்காமல் என்னை புறக்கணித்து வருகின்றனர். எனக்கு எதிராக 2009ல் இருந்தே கிரிக்கெட் போர்டுக்குள் சதிவேலையை துவங்கிவிட்டனர். தற்போதைய பயிற்சியாளர் கிப்சன், இப்பதவிக்கு வரும்முன் என்னைப் பயன்படுத்திக் கொண்டார். பிறகு, இவர் தான் எனது எதிர்காலத்தையே அழிக்க முயற்சித்தவர் என, நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
சொந்த செலவு:
கடந்த அக்டோபரில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினர். இருப்பினும், இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 333 ரன்கள் எடுத்தேன். ஆனால் என்னை அணிக்கு உண்மையாக நடக்கவில்லை என்று, கேவலமாக குற்றம் சுமத்துகிறார் அணியின் தலைமை அதிகாரி எர்னஸ்ட் ஹிலாரே. உண்மையில், அணியில் விளையாடும் போது எனக்கு ஏற்பட்ட மருத்துவ செலவை, சொந்த பணத்தில் கட்டினேன் என்பது இவருக்கு தெரியுமா.
மறந்து விட்டனர்:
சமீபத்தில் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட்டுக்குப் பின், அணிக்காக நான் சிந்திய வியர்வை, ரத்தம், கடின உழைப்பு அனைத்தையும் மறந்துவிட்டு, திடீரென வெளியே தள்ளிவிட்டனர். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி முகாமுக்கு அழைக்கவில்லை. அணியிலும் சேர்க்கவில்லை. இதை நான் பத்திரிகைகளில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
எண்ணமே இல்லை:
பின் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சர்வான், சந்தர்பால், கெய்ல் தேர்வு செய்யப்படுவார்கள் என, டபிள்யு.ஐ.சி.பி., வெளிப்படையாகவே அறிவித்தது. ஆனால் அணி நிர்வாகத்துக்கு, என்னை மட்டும் தேர்வு செய்யும் எண்ணமே இல்லை. ஏனெனில், அவர்கள் தான் ஏற்கனவே என்னை புறக்கணித்து விட்டார்களே.
அழிக்க முயற்சி:
இவர்கள் எல்லாம் சேர்ந்து எனது எதிர்காலத்தை அழிக்க முயற்சித்தனர். சமாதான கூட்டம் நடத்தியது எல்லாம் மக்களை ஏமாற்ற, போடப்பட்ட நாடகம். இனி காத்திருப்பதில் பலனில்லை. எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்னும் ஓரிரு ஆண்டுகள் தான் கிரிக்கெட் விளையாடுவேன்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நான் தேவையில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். வேறு வழியில்லாததால், எனக்கான வாய்ப்புகளை வேறு இடங்களில் தான் தேட வேண்டும். இவை அனைத்தையும் மீறி, மீண்டும் ஜமைக்கா அணிக்காகவும், தேசிய அணியிலும் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை லேசாக உள்ளது.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.
--