

ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் தொடர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை உலகின் நம்பர் 1 வீரர் ரஃபேல் நடால் கைப்பற்றி இதே தொடரில் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
டேவிட் ஃபெரருடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் 6- 2, 6- 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.கடந்த வாரம் மாண்ட்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸிலும் சாம்பியன் பட்டம் வென்ற நடால் அங்கும் தொடர்ச்சியாக 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த ஆட்டக்களங்கள் நடால் மிகவும் லாவகமாக விளையாடும் செம்மண் ஆட்டக்களம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செம்மண் ஆட்டக்கள டென்னிஸ் போட்டிகளில் 34 போட்டிகளில் தற்போது தொடர்ச்சியாக நடால் வென்றுள்ளார்.
வெற்றி பெற்றவுடன் வழக்கம் போல் பார்சிலோனா கிளப் குளத்தில் ஒரு நீச்சல் குளியல் போட்டார் ரஃபேல் நடால், வெற்றியைக் கொண்டாடும் ஒரு விதமாகும் இது.
அடுத்த ஞாயிறன்று மேட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் தொடங்குகிறது. இதிலும் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மண் தரை டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்ட வென்றவர்களில் கில்லர்மோ விலாஸ் (45 பட்டங்கள்), தாமஸ் மஸ்டர் (40 பட்டங்கள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 31 பட்டங்கள் வென்று நடால் 3-வது இடத்தில் உள்ளார்.
இறுதிப் போட்டியில் பல சோதனை முறைகளைக் கையாண்டார் நடால், ஷாட்களில் கோணங்களை அடிக்கடி மாற்றிப்பார்த்தார் அனைத்தும் அவருக்குச் சாதகமாக அமைந்தது. ஃபெரர் சற்றே அந்த கோணங்களினால் நிலை குலைந்தார்.
ஃபோர்ஹேண்ட் ஷாட்கள், சர்வ்கள் என்று நடாலின் ஆட்டத்தில் மெருகு கூடியிருந்ததைக் காண முடிந்தது.