

முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
முன்னதாக டொஸ் வென்ற டெக்கான் அணி மும்பையை பேட் செய்ய அழைத்தது. மும்பை அணியில் சச்சினும், ஜேக்கப்சும் அதிரடியாக விளையாட 5 ஓவர்களில் 47 ரன்களை எட்டியது. 6வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. ஜேக்கப்ஸ் 20 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பாபா மறைந்த சோகத்தில் களமிறங்கிய சச்சின், 24 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் வந்த ராயுடு 7 ரன்களிலும், பொல்லார்டு ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 9.1 ஓவர்களில் 70 ரன்களாக இருந்தது.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும், சைமண்ட்சும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். கடைசிக் கட்ட ஓவர்கள் நெருங்கிய போது அதிரடியைக் காட்டினர். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
ஸ்டெயின் வீசிய 19வது ஓவரில் சைமண்ட்ஸ் ஒரு சிக்ஸரையும், இரண்டு பவுண்டரிகளையும் விரட்டினார். கிறிஸ்டியான் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விரட்டிய ரோஹித் சர்மா 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
கடைசிப் பந்தை ரோஹித் பவுண்டரிக்கு விரட்ட மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எட்டியது. ரோஹித் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்களுடனும், சைமண்ட்ஸ் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் மும்பை அணி 40 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய டெக்கான் அணியில் சோஹல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜோடி சேர்ந்த தவாண், சங்ககரா ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது. தவாண் 25 ரன்களிலும், சங்ககரா 34 ரன்களிலும் மலிங்காவின் பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தனர். பின்னர் வந்தவர்களில் கிறிஸ்டியான் 21 ரன்கள் எடுத்தார்.இருப்பினும் கடைசிக் கட்டத்தில் மிஸ்ரா அதிரடியாக ஆடியபோதும் டெக்கான் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களே எடுத்தது. மிஸ்ரா 25 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மும்பை தரப்பில் மலிங்கா 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.