

இந்த சாதனையைப் போற்றிப் பாராட்டும் வகையில், இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தமிழக அரசின் சார்பில் 3 கோடி ரூபாய் சிறப்புப் பரிசும், இந்திய கிரிக்கெட் அணியில் பங்கு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஒரு கோடி ரூபாய் சிறப்புப் பரிசும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, உலகக் கோப்பையை வென்று நம் நாட்டிற்குப் புகழ் தேடித் தந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 3 கோடியைச் சமமாகப் பிரித்து வழங்கிட முடிவு செய்து - அணியின் தலைவர் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு தலா 21 லட்சத்து 42 ஆயிரத்து 857 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவுரவச் செயலாளர் என்.சீனிவாசனிடம் அணியின் மற்ற வீரர்களுக்கான காசோலைகளையும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அஸ்வினிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையையும் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று புதிய தலைமைச் செயலகத்தில் நேரில் வழங்கி வீரர்களை வாழ்த்திப் பாராட்டினார்.
பரிசு பெற்ற வீரர்களுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். அமைச்சர்கள் அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மைதீன்கான். அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், தலைமைச் செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவுரவ செயலாளர் விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் டோனி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், சீனிவாசன் ஆகியோர் புதிய சட்டசபை கூட்ட அரங்கை பார்வையிட்டனர். அவர்களை துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து சென்று சுற்றிக் காட்டினார். அப்போது சபாநாயகர் ஆவுடையப்பனை அறிமுகம் செய்து வைத்தார்.
பரிசு பெற்றது குறித்து டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக கோப்பை போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இது வீரர்களை ஊக்கப்படுத்தும். தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நேரில் பரிசு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக வீரர் அஸ்வின் கூறும்போது,
முதல்- அமைச்சர் கருணாநிதி எனக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கி இருக்கிறார். அதை அவரிடம் நேரிலேயே பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் நன்றி என்றார்.