

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரிடையாக இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு துவக்கத்திலேயே 'அடி' விழுந்தது. ஜாகிர் வீசிய முதல் ஓவரில் மைக்கேல் ஹசி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அரவிந்த் வீசிய அடுத்த ஓவரில் முரளி விஜய் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சென்னை அணி, 2 விக்கெட்டுக்கு 7 ரன்கள் எடுத்து தத்தளித்த நிலையில், பத்ரிநாத், சுரேஷ் ரெய்னா இணை பொறுப்பாக ஆடியது. மிதுன் பந்தில் பத்ரிநாத் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் தோனியுடன் தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் ரெய்னா. மிதுன் வீசிய போட்டியின் 13வது ஓவரில் ரெய்னா இரண்டு சிக்சர், தோனி ஒரு பவுண்டரி அடிக்க, 23 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்து ஜாகிர் ஓவரில் ரெய்னா 2 சிக்சர், தோனி ஒரு சிக்சர் அடிக்க 20 ரன்கள் கிடைத்தன. இந்த ஓவரில் தோனி (29) ஆட்டமிழக்க சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், அடுத்து வந்த ஆல்பி மார்கலின் அதிரடி ஆட்டம் சென்னை அணிக்கு கைகொடுத்தது.
கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் சென்னை அணிக்கு வெற்றி என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. அனுபவம் வாய்ந்த பெங்களூரு அணி கேப்டன் வெட்டோ ரி பந்துவீசினார். முதல் பந்தில் ரெய்னா ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் மார்கல் ஒரு பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் 2 ரன். 4வது பந்தில் மார்கல் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, சென்னை அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ரெய்னா(73), மார்கல்(28) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருது ரெய்னாவுக்கு வழங்கப்பட்டது.