
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஐ.பி.எல்.விளையாடும் வீரர்களின் இடைவெளியை நிரப்புவதற்கு இலங்கை அணியில் சகல துறை வீரர் பர்வீஸ் மஹ்ரூப் மற்றும் விக்கெட் காப்பாளர் கெளஷால் சில்வா ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
ஐ.பி.எல். இருபது 20 தொடரில் விளையாடுவதால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சிலர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் ஆரம்ப பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ள முன்னணி வீரர்களான சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் ஆரம்ப பயிற்சிப் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்களின் இடைவெளியை நிரப்பவே மஹ்ரூப், சில்வா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மஹ்ரூப் தற்போது இங்கிலாந்து முதல்தர போட்டியில் லங்காஷயர் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இந்த தொடரில் சதம் ஒன்றையும் பெற்றுள்ளார்.
எனவே, அவர் நேரடியாக இலங்கை அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார். மஹ்ரூப் இலங்கை அணிக்காக கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது கடந்த 2007 ஆம் ஆண்டில் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று 24 வயதான கெளஷால் சில்வா இலங்கை முதல் தர போட்டிகளில் சிறப்பாக செயல்படுகிறார்.