
கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங்கை தடுக்க ஐசிசி மேலும் பல புதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இந்நிலையில் இம்ரான் கான், இது குறித்துக் கூறியது:
கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் சூதாட்டத்தில் ஈடுபடுவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாது. இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க புதிய நடைமுறைகள் தேவை. எனவே ஐசிசி இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஐபிஎல் குறித்து தெரிவிக்கையில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த பிறகு பல சிறந்த வீரர்களை அடையாளம் காண முடிந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்த அளவில் கிரிக்கெட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வது, பரிந்துரைகள் ஏற்கப்படுவது போன்றவை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையுள்ளது. நிர்வாகத்தை சீர்படுத்துவது. திறமையான வீரர்களை மட்டும் தேர்வு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாகிஸ்தான் அணி உலகின் தலைசிறந்த அணியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார் இம்ரான் கான்.