00:41
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்னே எடுக்க முடிந்தது.ரோகித்சர்மா 47 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் தெண்டுல்கர் 31 ரன்னும் எடுத்தனர். வாட்சன் 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன் எடுத்தது. வாட்சன் 47 பந்தில் 89 ரன்னும் (6 சிக்சர், 9 பவுண்டரி), டிராவிட் 32 பந்தில் 43 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர்.
வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். ராஜஸ்தான் அணிக்கு அனைத்து லீக் ஆட்டங்களும் முடிந்து விட்டன. அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்) தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ராஜஸ்தான் அணி 14 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி பெற்றது. 7 போட்டியில் தோற்றது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அந்த அணி 13 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தை பிடித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது தோல்வியை சந்தித்தது. கடந்த 3 ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை தனது கடைசி “லீக்” ஆட்டத்தில் கொல்கத்தாவை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். 16 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி தற்போது ரன்ரேட்டில் பின் தங்கி காணப்படுகிறது.
இந்த தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர் கூறியதாவது:-
தோல்விக்கு எந்த காரணமும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. நாங்கள் அதிகமான ரன்களை குவிக்க தவறி விட்டோம். வாட்சனின் ஆட்டம் முத்திரை பதிக்கும் வகையில் இருந்தது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு எந்த கட்டத்திலும் ஏற்படவில்லை. கடந்த சில ஆட்டங்களில் எங்களது ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. 18 புள்ளிகளை பெற இன்னும் ஒரு வெற்றி தேவை உள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்வா? சாவா? நிலையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளி பெற்றுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை நாளை (22-ந்தேதி) சந்திக்கிறது.
