

கொல்கத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
மும்பையின் முன்னணி வீரர்கள் வேகமாக வெளியேறியபோதும், கடைசிக் கட்டத்தில் பிராங்கிளின் 23 பந்துகளில் 45 ரன்களும், ராயுடு 17 ரன்களும் விளாச அந்த அணி 9-வது வெற்றியை பெற்றது. கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது ராயுடு சிக்ஸர் அடித்து வெற்றி தேடித்தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
முன்னதாக பூவா தலையா வென்ற மும்பை அணி, கொல்கத்தாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர் கோஸ்வாமி 1 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு வந்த கேப்டன் கம்பீர், சிக்ஸர் அடித்த கையோடு வெளியேறினார். 7 பந்துகளில் அவர் 8 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த காலிஸýம், திவாரியும் சற்று வேகமாக ஆடினர். திவாரி 22 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த பதான் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பிராங்கிளின் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி அரைசதத்தை நிறைவு செய்த காலிஸ், அடுத்த பந்திலும் சிக்ஸர் அடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். 42 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார் காலிஸ். இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய மும்பை அணியில் சுமன் 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து சச்சினுடன் ஜோடி சேர்ந்தார் ஹர்பஜன் சிங். அவர் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கேப்டன் சச்சின் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய பொல்லார்டு கொல்கத்தாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்.
22 பந்துகளைச் சந்தித்த அவர் 18 ரன்கள் மட்டுமே எடுத்து பாலாஜி பந்துவீச்சில் போல்டு ஆனார். இதன்பிறகு பிராங்கிளினும், ராயுடும் ஜோடி சேர்ந்தனர். அப்போது 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. பிராங்கிளின் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. பாலாஜி வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளை பிராங்கிளின் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப் பந்தை எதிர்கொண்ட ராயுடு சிக்ஸர் அடித்து வெற்றித் தேடித்தந்தார்.