

புதிய முறைப்படி மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க கொல்கத்தா அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் "டுவென்டி 20" தொடரில் வெல்லும் அணிகள் பங்கேற்கும், சாம்பியன்ஸ் லீக் தொடர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்தது. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடர், வரும் செப். 23 முதல் அக். 9 வரை இந்தியாவில் நடக்கிறது.
இத்தொடரில் புதிய முறை அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது. மொத்தம் பங்கேற்கும் 10 அணிகளில், இந்தியாவின் "டாப் 3" அணிகளும், அவுஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவில் இருந்து தலா 2, இங்கிலாந்தின் ஒரு அணி என 8 அணிகள் தேர்வாகி விட்டன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்ய, இம்முறை தகுதிச் சுற்று போட்டி நடத்தப்படுகிறது.
இந்த தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கையில் இருந்து தலா ஒரு அணியும், ஐ.பி.எல். "பிளே ஆப்" சுற்றில் வெளியேறிய நான்காவது அணியும் பங்கேற்கும். இதன் முடிவில் இரு அணிகள் தேர்வாகும்.
வரும் 29 ம் திகதி சென்னையில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் நிர்வாக குழு கூட்டத்தின் முடிவில், தகுதி சுற்று தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. இந்த புதிய முறை மூலம், தகுதி சுற்றில் அசத்தும் பட்சத்தில் கொல்கத்தா அணிக்கு சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.