

கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் “டிரா” செய்யும் வகையில் இந்திய வீரர்கள் விளையாடினார்கள். இந்திய அணிக்கு 47 ஓவரில் (கூடுதலான 15 ஓவரையும் சேர்த்து) 180 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 32 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்து இருந்தபோது கேப்டன் டோனி ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
கூடுதலான 15 ஓவரை ஆடுவதற்கு முன்னதாகவே ஆட்டத்தை முடித்துக்கொண்டார். 90 பந்தில் 80 ரன் தேவை என்ற நிலையில் இருந்த போது ஆட்டத்தை அவர் முடித்துக்கொண்டது ஆச்சரியம் அளித்தது. வெற்றிக்காக போராடாமல் “டிரா” செய்யும் நோக்கில் அவர் இந்த முடிவை மேற்கொண்டார்.
“டிரா” செய்யும் வகையில்தான் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்தது சரிதான் என்று டோனி நியாயப்படுத்தினார். தொடரை கைப்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதி தான் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்தார். வெற்றிக்காக ஆடாமல் டோனி முன்னதாக ஆட்டத்தை முடித்தது சரியான முடிவுதான் என்று பயிற்சியாளர் டங்கன் பிளாட்சர் நியாயப்படுத்தி உள்ளார்.
இந்த ஆடுகளத்தில் ரன் இலக்கை நோக்கி ஆடுவது சவாலானது. 2-வது இன்னிங்சை இந்தியா ஆடுவதற்கு முன்பே இதை தெரிவித்தேன். அதற்கு ஏற்றவாறு ரன் எடுக்க சிரமம் இருந்தது. 40 ரன்னை எடுத்த பேட்ஸ்மேனும் ஒரு ஓவருக்கு 3 ரன் எடுப்பதற்கு சிரமமாக இருந்தது.
அப்படிப்பட்ட ஆடுகளத்தில் ஒரு ஓவரில் 5 அல்லது 6 ரன் எப்படி எடுக்க முடியும் இதனால் ஆட்டத்தை முன்னதாக முடித்தது சரிதான். தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் சிறப்பாக செயல்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.