

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் இருந்து இங்கிலாந்து செல்கிறது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது 2 ஆயிரமாவது டெஸ்ட் போட்டி ஆகும். 2,000-வது டெஸ்ட் போட்டி என்பதால் இந்த ஆட்டம் வரலாற்று சிறப்பை பெறுகிறது. இதையொட்டி ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் கனவு அணியை தேர்வு செய்கிறது. அதாவது இதுவரை நடந்த டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் சிறந்த அணியை தேர்வு செய்கிறது. இதில் இந்திய வீரர்கள் தெண்டுல்கர், ஷேவாக் ஆகியோரது பெயர்கள் ஐ.சி.சி. கனவு அணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடக்க வீரர்கள் பட்டியலில் ஷேவாக், கவாஸ்கர் ஆகியோரும், மிடில் ஆர்டரில் தெண்டுல்கரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேபோல கபில்தேவ் (ஆல்ரவுண்டர்), பிஷன்சிங் பெடி, கும்பளே (சுழற்பந்து) ஆகியோரது பெயர்களும் பரிந்துரையில் உள்ளன.
டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆடம் கில்கிறிஸ்ட், வார்னே (ஆஸ்திரேலியா) வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), மார்க் பவுச்சர் (தென்ஆப்பிரிக்கா) உள்பட பல வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.