
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் யுவராஜ், ஜாகீர், கம்பீர், ஸ்ரீசாந்த், சாஹா ஆகியோர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து இங்கிலாந்து சென்றனர். வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடிய இந்திய அணி, அடுத்து இங்கிலாந்து சென்று 4 டெஸ்ட், ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 21ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக, சாமர்செர் டான்டன் மைதானத்தில் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. டோனி தலைமையில் வெஸ்ட் இண்டீசில் விளையாடிய வீரர்கள் அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்து செல்கின்றனர்.
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடாத யுவராஜ், ஜாகீர், கம்பீர், ஸ்ரீசாந்த் ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவும் நேற்று முன்தினம் இரவு மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து சென்றனர்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே லண்டன் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தோள்பட்டை காயம் முழுவதுமாக குணம் அடையாததால், தொடக்க வீரர் சேவக் அடுத்த வாரம் லண்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 2வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: டோனி (கேப்டன்), கம்பீர், டிராவிட், சச்சின், லஷ்மண், ரெய்னா, யுவராஜ், விருத்திமான் சாஹா, ஹர்பஜன், அமித் மிர்சா, ஜாகீர், இஷாந்த், முனாப், ஸ்ரீசாந்த், பிரவீன், சேவக், முகுந்த்.