

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21 ம் தேதி தொடங்குகிறது. முன்னாள் கப்டன் மைக்கல் வாஹன், கிரிக்கட் வீரர்கள் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சச்சின் 2007 ல் இருந்ததைவிட இப்போது முற்றிலும் வித்தியாசமான துடுப்பாட்ட வீரராக திகழ்கிறார். உலகின் மிகச்சிறந்த வீரரான அவர், இப்போது தன்னுடைய துடுப்பாட்டத்தில் சில மாறுதல்களை செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அபாரமாக ஆடி வருகிறார். ஆரம்ப காலத்தில் ஆடியதைப் போன்று அபாரமாக ஆடி மீண்டும் ரன் குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். 2007 ல் அவருக்கு எதிராக கிறிஸ் டிரம்லெட் அற்புதமாக பந்துவீசினார். ஆனால் இப்போது சச்சின் மேலும் சிறப்பாக ஆடி வருகிறார். ஆப் ஸ்டம்புக்கு அருகில் வரும் பந்துகளை எதிர்கொள்வதில் எல்லா துடுப்பாட்ட வீரர்களுமே தடுமாற்றம் காண்பார்கள். ஆனால் சச்சினிடம் அதுபோன்ற எந்தவொரு பலவீனத்தையும் காணமுடியாது.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினால் சில ஷார்ட் பிச் பந்துகளை வீசி அவரை சோதிக்கலாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷார்ட் பிச் பந்துகளை சச்சின் எளிதாக எதிர்கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு முன்னாள் கப்டன் நாசர் உசேன் கூறியிருப்பது, மனரீதியாக மட்டுமின்றி, தனது ஆட்ட நுணுக்கங்களிலும் சில மாற்றங்களை செய்துள்ளார். கிரிக்கட்டை மிகவும் நேசிக்கும் அவர், பல்வேறு ஷாட்களையும் கையாள்கிறார். ஒரு போட்டியில் சதமடித்துவிட்டால் அதன் பிறகு ரன் குவிக்கும் இயந்திரமாக மாறிவிடுவார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சச்சின் தனது அபார ஆட்டத்தால் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதனால் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடுவார் என்றார்.
முன்னாள் கப்டன் ஆதர்டான் கூறியிருப்பதாவது, 1996 ல் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த போட்டியில் சச்சின் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டேன். அதன்பிறகு சுதாரித்துக் கொண்ட சச்சின், அந்தப் போட்டியில் சதமடித்தார். அவரை நிலைத்து ஆடவிடாமல் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். அவர் மைதானத்தில் மிகவும் அமைதியாகக் காணப்படுவார். அவரை வீழ்த்துவது கடினமானது. அவர் மிகவும் உறுதிமிக்க வீரர்.
இப்போது தனது ஆட்டமுறைகளிலும் சில மாறுதல்களை செய்துள்ளார். அவர் தனது ஆட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்றார்.
மற்றொரு முன்னாள் கப்டன் கிரஹாம் கூச் கூறியிருப்பது, 1990 களில் அவரைப் போன்ற உறுதிமிக்க வீரரை பார்த்ததில்லை. தனது 17 வயதிலேயே பந்துகளை சரியாக கணித்து சிறப்பாக விளையாடும் திறனைப் பெற்றிருந்தார். அப்போதே முன்னணி வீரருக்கு உரிய அனைத்து தகுதியையும் பெற்றிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.