
இந்தியாவின் சச்சின் சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் அவரும் மனிதன் தான் என்பதை இங்கிலாந்து வீரர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் மைக்கல் வான் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், வரும் 21 ம் திகதி லண்டன் லார்ட்சில் துவங்குகிறது. இந்த தொடர் குறித்து மைக்கல் வான் கூறியது, இந்திய வீரர் சச்சின் சிறந்த துடுப்பாட்ட வீரராக உள்ளார். இதைக்கண்டு இங்கிலாந்து வீரர்கள் பயந்து விடக்கூடாது. அவரும் மனிதர் தான் என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
சச்சின் தவறு செய்யாமல் இருக்க முடியாது. அவரைக் குறித்து வார்த்தைகளால் பேசுவதை விட்டுவிட்டு, அவருக்கு எதிராக பந்துகளால் பேசவேண்டும். 20 ஆண்டுகளாக சச்சின் தனது மட்டையால் தான் பேசி வருகிறார். இவர் தான் டொப்: எப்போதும் இல்லாத வகையில் சமீபகாலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தான் முக்கிய துருப்புச் சீட்டு. இவரது 100 வது சதம், வியக்கத்தக்க சாதனை. நான் இவரது காலத்தில் விளையாடி உள்ளேன். நான் பார்த்த வீரர்களில் அவர் தான் டொப். எவ்வித நெருக்கடி, கடினமான சூழலையும் எதிர்த்து, தன் மீதான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சரியாக செயல்படுவார்.
இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமரை விட இவர் தான் பிரபலம். ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும், ஏதாவது ஒரு நெருக்கடியில் தான் இருப்பார். பின் அனைத்தையும் சரியாக செய்து துடுப்பாட்டத்தில் சாதிப்பார். அவரது துடுப்பாட்ட திறன் அசாத்தியமானது.
சச்சினின் துடுப்பாட்டம் குறித்து பத்தாண்டுகளில், எவ்வளவோ விமர்சனங்கள் வந்துள்ளன. இதுபோன்ற கருத்துக்களை, தனது துடுப்பாட்ட திறனை முன்னேற்ற பயன்படுத்திக் கொள்வார். இதனால் தான் அவர் இன்னும் களத்தில் நிற்கிறார்.
எதிர்வரும் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள், சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய வீரர்கள் தவறு செய்யத் துவங்குவார்கள். இதைப் பயன்படுத்தி தொடரை வெல்லலாம் என்று மைக்கல் வான் தெரிவித்தார்.