
இலங்கை - அவுஸ்திரேலியத் தொடரில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் (டிஆர்எஸ்) முறை பயன்படுத்தப்படும் என இலங்கை கிரிக்கட் வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக இலங்கை கிரிக்கட் வாரியம் கடுமையான நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. அதனால் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் டி.ஆர்.எஸ். முறை கிடையாது என சில நாள்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. ஆனால் இப்போது டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்படும் என இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் தர்மதாஸா கூறுகையில், டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்துவதால் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் செலவாகும். நிதி ஒரு பிரச்சினையே இல்லை. ஹொங்காங்கில் நடைபெற்ற ஐ.சி.சி. கூட்டத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் டி.ஆர்.எஸ். முறையை அமல்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போதிலிருந்து நாங்கள் அதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.
புதன்கிழமை நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கட் வாரிய கூட்டத்திற்குப் பிறகு, இலங்கை - அவுஸ்திரேலியத் தொடரில் டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்துவது தொடர்பாக ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதப்படும் என்றார்.
ஓகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் அவுஸ்திரேலிய அணி 2 ”டுவென்டி 20” ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. வரும் ஒக்டோபர் முதல் அனைத்து போட்டிகளிலும் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.