
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது.
பெண்களுக்கான, நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் விளையாடின. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பூணம் ராத் (38), வேதா கிருஷ்ணமூர்த்தி (29), ஹர்மன்பிரீத் கவுர் (21), மிதாலி ராஜ் (12), ஜூலான் கோஸ்வாமி (12) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இந்திய அணி 46.3 ஓவரில் 150 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் காதே பிராட்மோர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் அமீ வாட்கின்ஸ் (32), சாரா மெக்கிளாசன் (22), காடே மார்டின் (20*) உள்ளிட்டோர் ஆறுதல் அளித்தனர். மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற நியூசிலாந்து அணி 40.3 ஓவரில் 118 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் அமிதா சர்மா, எக்டா பிஷ்ட் தலா 3, ஜூலான் கோஸ்வாமி 2 விக்கெட் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.
இங்கிலாந்து சாம்பியன்:
இத்தொடரின் பைனலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு கிரீன்வே (58), சாராக் டெய்லர் (43), கிளையர் டெய்லர் (30), சார்லோட்டி எட்வர்ட்ஸ் (31) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேஸ் கேமிரான் (75) ஆறுதல் அளித்தார். மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டு, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி கோப்பை வென்றது.