
சோயப் மாலிக்கின் வங்கிக் கணக்கில் இருந்த 90,000 பிரிட்டன் பவுண்டுகள் தொகைக்கான கணக்கு எங்கே என்று பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தின் நேர்மைக் குழு மாலிக்கைத் துருவி வருகிறது.
நேர்மைக் குழு மாலிக்கிடம் கேட்ட அனைத்து ஆவணங்களையும், கணக்குகளையும் சமர்ப்பித்தார். ஆனால் இந்த 90,000 பவுண்டுகள் தொகைக்கான கணக்கு விவகாரத்தில் சோயப் மாலிக் இது வரை ஒழுங்கான பதில் கூறாமல் மழுப்பி வருவதாக பாகிஸ்தான் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சோயப் மாலிக்கிற்கு பாகிஸ்தான் அணியில் மத்திய வீரர்கள் ஒப்பந்தமும், அணியில் இடம் பெறுவதும் தாமதமாகி வருகிறது.
மாலிக்கின் பழைய வங்கிக் கணக்கு அறிக்கையில் இந்த 90,000 பவுண்டுகள் இருந்துள்ளது. ஆனால் சமீபத்திய வங்கிக் கணக்கு அறிக்கையில் இந்தத் தொகை மாயமாகியுள்ளது. செலவு செய்திருந்தார் என்றால் என்ன செலவு செய்தார் என்று கணக்குக் காட்ட வேண்டியது அவசியம், ஆனால் மாலிக்கோ தனது நண்பர்கள் சிலருக்குக் கடன் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த நண்பர்கள், என்ன கடன், எவ்வளவு தொகை போன்ற விவரங்களை அளிக்கவில்லை. இதனால் இந்த விவரங்களை அளித்தால் மட்டுமே அவர் பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து இடம்பெற முடியும் சூழ்நிலை உருவாகியுள்ளது.